‘விவாதம்’ பகுப்புக்கான தொகுப்பு

நெஞ்சு பொறுக்குதில்லையே

//Why you oppose Brahmins and their duties?can you all opposites be happy if all Brahmins are dead in this world?..it is better to kill them than to seduce them in this way…SORRY…NENJAM PORUKUTHILAYAE…. //

என்னுடைய முந்தைய பதிவான மகாத்மாவின் அரசியல் என்னும் பதிவில் வந்த அனானிப்பின்னூட்டம்தான் மேலே இருப்பது. இது போன்ற வினாக்கள் பலமுறை பலவடிவில் பலரால் கேட்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும் திரும்ப திரும்ப பதிலளிக்க வேண்டிய நிர்பந்தங்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அனானியாக வந்திருந்தாகும் உங்களின் ஆதங்கம் என்பது புரிந்து கொள்ளக்கூடியது என்பதும் திறந்த மனதோடு கேட்கப்பட்ட கேள்வியாக நான் கருதுவதாலும் உங்கள் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த பதிவை எழுதுகிறேன்.

திறந்த மனதோடும், நேர்மையோடும் நடைபெறும் கருத்துப்பரிமாற்றங்களினால் புரிதல்களில் இருக்கும் முரண்களை நாம் களைந்து கொள்ள இயலும். அத்தைகையதொரு செயல்களை அடுத்த நிலைக்கு நம்மை நகர்த்திச்செல்ல உதவும்.

உங்கள் புரிதலிலே பிழை உள்ளது. என்னுடைய (அ) எங்களுடைய எதிர்ப்பு என்பது பிராமணர்களையோ அவர்களது தனிப்பட்ட கடமைகளையோ அல்ல. சிலருடைய எதிர்ப்பு வெறும் பிராமண எதிர்ப்பாக அமைந்துவிடுவதை மறுப்பதற்கில்லை என்றாலும் என்னுடையது பிராமணர் எதிர்ப்பு இல்லை.

உங்கள் கடமைகள் எதிர்க்கப்படுகிறது என சொல்லியிருக்கிறிர்கள். தனிமனித உரிமைகளோ, அல்லது பழக்க வழக்கங்களோ அவர்களோடு நின்று விடும்போது அதற்குள் யாரும் தலையிடுவது இல்லை. அந்த கடமைகள் சமூகத்தின் மீது தாக்கத்தையும் அதிகாரத்தையும் செலுத்தும் போது அவைகள் கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. மனிதர்களின் மீதான பாகுபாடு உங்களுக்கு புனிதமாக இருக்கும் வேதங்கள் மூலமாகவும் ஸ்மிருதிகளின் மூலமாகவும்தான் பிறர்மீது பிரயோகிக்கப்பட்டிருக்கிறது என்பதை மறுத்துவிட இயலாது. உங்களுடைய நம்பிக்கைகள் என்பது உங்களுடைய எல்கைக்களைத்தாண்டி பொதுச்சமூகத்தில் தன் தாக்கத்தினை ஏற்படுத்தும் போது அது விமர்சிக்கப்படுகிறது. எதிர்க்கப்படுகிறது.

சமூகத்தில் ஏற்றத்தாழ்வையும் சகமனிதனிதனிடம் காட்டப்பட வேண்டிய சமத்துவத்தையும் மறுத்து தீண்டாமை என்றும் வர்ணம் என்றும் பேதமைப்படுத்தி அதை நீங்கள் தொடர வேண்டிய கடமையாக ஆக்கிச்சென்றிருக்கும் உங்கள் புனிதங்களை மூர்க்கத்தனமாக எதிர்க்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது, இங்கு நடைபெறுவது தனிமனித எதிர்ப்பு அல்ல,அந்த தனிமனிதன் தான் நம்பிக்கைக் கொண்ட, தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தத்துவத்தையே எதிர்ப்பதாகும்.

பிராமணர்களின் கடமைகள் என்பது பெரும்பான்மை மக்களின் உரிமைகளை நசுக்குவது மேலாண்மை செய்வது என்று வரும்போதுதான் அவை கண்டிக்கப்படுகின்றன. பிராமணர்களை விட பிராமணியமே இங்கு நீக்கமற கலந்திருக்கிறது. ஆகவே பிராமணர்களை அழித்துவிடுவதால் மட்டுமே பிராமணியம் அழிந்துவிடப்போவதில்லை. அது எல்லாச் சாதிகளிலும் மிக ஆழமாக வேருன்றீ இருக்கிறது.

ஒரு பதிவிலோ ஒரு உரையாடலிலோ தீர்வு காணக்கூடிய சாத்தியதை உள்ள பிரச்சனை அல்ல இது. மிக ஆழமாக அதே சமயம் விருப்பு வெறுப்பின்றி, தொடர்ச்சியாக விவாதிக்கக்பட வேண்டிய பிரச்சனை.அத்தகையதொரு விவாதத்திற்கு நீங்கள் தயார் என்றால் முழுமையாக விவாதிக்க நான் தயராகவே உள்ளேன்.

அடக்குமுறைக்குட்பட்ட சமூகம் தன் குரல் அதன் மொழியில் சிறிய அளவில் வெளிப்படுகையிலே நெஞ்சு பொறூக்குதில்லையே என்று வேதனைப்படுகிறீர்கள். இலக்கியரசம் சொட்ட தேர்ந்த மொழியில் வெளிப்படும் வஞ்சத்தை என்னவென்று சொல்ல. நெஞ்சம் உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான் இருக்கிறது. அவை உரத்து ஒலிக்கத்துவங்கினால் உண்மையின் சூடு தாளாது உங்கள் நெஞ்சம் வெடித்துவிடக்கூடும்.

எனவே தயாராக இருங்கள் .

இது உங்களுக்கான தனிப்பட்ட பதிவு என்றாலும் உங்களைப் போல எண்ணிக்கொண்டிருக்கும் எல்லாருக்கும் பொருந்தக்கூடியதே.