‘நூறாவது பதிவு’ பகுப்புக்கான தொகுப்பு
பதிவுகள் தேவையா?? 100வது பதிவு
99 பதிவு எழுதி இருந்த எனக்கு சோதனை, மாநாடு கண்டான் ஆசிப் வடிவில் வந்தது. நேற்று 2.12.2006 துபாயில் நடைபெற்ற வலைபதிவர் சந்திப்பில் வாசித்த அல்லது பேசிய தலைப்புதான் ”பதிவுகள் தேவையா”.
இதை விட சொந்த செலவில் சூன்யம் யாராலும் வைத்துக்கொள்ள முடியாது
.
பதிவுகள் தேவையா? என் பதில் நிச்சயம் தேவை. இன்னும் அதிகமாகவே பதிவுகள் வர வேண்டும் என்பதே என் விருப்பமும். இணையம் ஒரு சுதந்திரவெளி. கட்டுப்பாடுகளற்ற வெளி. கணினியும் ஆர்வமும் இருக்கும் அனைவருமே பங்கேற்கும் சாத்தியம் உள்ள ஒரு அற்புதமான வாய்ப்பு. இணையத்தின் வழியான கருத்துப்பரிமாற்றத்திற்கு பயன்படும் ஒரு வடிவம் வலைப்பதிவுகள்.
எழுத்தும், கருத்தும் ஒரு சாராருக்கு என்று இருந்து வந்த நிலையை இணையம் தகர்த்திருக்கிறது. எழுத்து அனைவருக்குமானது. இங்கு பல குரல்கள் இருக்கின்றன. பல பார்வைகள் இருக்கின்றன. பல சூழல்கள் இருக்கின்றன. அவற்றின் தேவைகளும் முக்கியமானவை. கவனம் பெறப்பட வேண்டியவை. பொது என்ற சொல் அனைத்தையும் உள்ளடக்கியது என்பதை குறிப்பது. ஆனால் இன்றய பொதுத்தன்மை என்பது அனைவருக்குமானது என்றில்லாமல் திணிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்துவருகிறது. வரலாறு முதல் வாழ்வியல் வரை பன்முகத்தன்மை பிரதிபலிக்க, பன்முகத்தன்மையை அனுமதிக்கும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு இன்றி ஆதிக்கம் செய்வதாகவே இருந்துவருகிறது.
இத்தகைய சூழலிலில்தான் கருத்தியல் தளத்தில் வலைப்பதிவுகள் முக்கியம் வகிக்கின்றது. அனைத்து தரப்பினரும் தங்களது கருத்துகளை சுதந்திரமாக வெளியிட ஏதுவானதாக இருக்கிறது. இங்கும் ஆதிக்க மனோபாவம் இருக்கத்தான் செய்கின்றது. தர நிர்ணயாளர்களவும், அங்கீகார மையங்களாகவும் தங்களை பாவித்து கொள்ளும் போக்கு இருக்கிறது. அதற்கான மறுப்புகளும், எதிர்வினைகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
சுதந்திரம் இருக்கும் அளவிற்கு இதில் ”இடர்களும்” இருக்கத்தான் செய்கின்றது. ஒரு ஆரோக்கியமான கருத்து பகிர்வுக்கு, விவாதங்களுக்கு என மிகச்சிறப்பாக வலைப்பதிவுகளை பயன்படுத்த முடியும்.
”கருத்தில் நேர்மையும் உண்மையும் இருந்தால் எதிராளியை உன் வார்த்தைகள் காயம் செய்யாது”
. ஆனால் கருத்தை கருத்தால் எதிர் கொள்ளாது கீழ்த்தரமான, மனித தன்மையற்ற வகையில் எதிர்வினை புரிவது என்று மிகவும் வேதனை கொள்ளும் வகையிலும் எதிர்வினைகள் நிகழ்ந்து வருகிறது.
பதிவுக்கான பின்னூட்டங்களாகவோ, கருத்தாகவோ இல்லாமல் பதிவருக்கான கருத்துகளாகவே அணுகும் முறையும் தொடர்ந்து வருகிறது. அறிந்தோ அறியாமலோ, இந்த சுழலில் பெரும்பாலோனோர் சிக்கிக்கொள்ளும் போக்கும் இருந்தும் வருகிறது. இந்த குறை களையப்பட வேண்டும். இதை நாம் அனைவரும் இணைந்து களைய வேண்டும். இங்கு தேவைப்படுவது ”மனமுதிர்ச்சியே”
நேர்மையாகவும் உண்மையாகவும் இயங்குவது, கீழ்த்தரமாக இயங்குவது இது எல்லாமே தனிமனிதனின் குணநலனே. வலைப்பூ என்ற வடிவத்திற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. ஒரு சில தனிமனித ஒழுக்க குறைவினர்களால் இந்த வலைப்பதிவுகளை அச்சத்தோடு அணுகத்தேவையில்லை. விலகியிருக்கவும் தேவையில்லை. ஏனெனில் வலைப்பதிவுகள் என்பதை அச்சப்படக்கூடிய ஒன்றாக்கும் பிம்பங்களும் கட்டப்படுகின்றன. அவைகளும் நிராகரிக்கத்தக்க ஒன்றே.
”அணுவைக் கொண்டு ஆக்கமும் செய்யலாம்
அழிவும் செய்யலாம். ”
பயன்படுத்துபவர் கைகளில் இருக்கிறது ஆக்கமும் அழிவும். அணு ஆயுதங்கள் ஆபத்தானவை என்பதற்காக யாரும் அணுவைப் புறக்கணிப்பதில்லை.
**
நூறாவது பதிவாக இணையம் மூலம் நான் பெற்ற அனுபவங்களை எழுதலாம் என்ற யோசனையில், அசைபோடலில் நாட்களை கடத்திக்கொண்டிருந்த்தேன். 100வது பதிவை நண்பர்கள் முன் வாசித்ததும் ஒரு இனிமையான அனுபவமே. இணைய அனுபவங்கள் அடுத்த பதிவில்
மறுமொழிகள் (47)