‘நட்சத்திர வாரம்’ பகுப்புக்கான தொகுப்பு

*நட்சத்திரம்* – நிறைவு செய்கிறேன் – நன்றி அறிவித்தலோடு

ஒரு வழியாக என்னுடைய நட்சத்திர வாரம் இன்றுடன் இனிதே நிறைவு பெறுகிறது. விடைபெறுமுன் நான் முக்கியமாக செய்ய வேண்டியது நன்றி அறிவித்தல்.

நன்றி தெரிவித்தல் ஒரு பண்பாடு. நம்மை மரியாதை செய்த சக மனிதனுக்கு நாமும் அதே மரியாதைத் தருவது. இதில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதமெல்லாம் இல்லை. அதனால்தான் பெரும்பாலான பின்னூட்டங்களுக்கு பதில் அல்லது நன்றியைத் தெரிவித்திருக்கிறேன். யாரேனும் விட்டுப் போயிருந்தால் மன்னிக்கவும்

ஏறத்தாழ நட்சத்திர வாரம் தொடங்கியதிலிருந்து 1500 பார்வைகள். 13 பதிவுகள். நட்சத்திர அறிமுகத்தில் சொன்னதை ஓரளவிற்காவது செய்திருக்கிறேன் என்று உறுதியாக நம்புகிறேன். தமிழ் சார்ந்த சில கட்டுரைகளை எழுதத் திட்டமிட்டுருந்தாலும் அரைகுறையாக அவைகள் பதியப்படக்கூடாது என்பதாலேயே இந்த நட்சத்திர வாரத்தில் அந்த பதிவுகள் இடம் பெறவில்லை.மேலும் இது எனது 50வது பதிவு என்பது மகிழ்ச்சிகரமான ஒரு தற்செயல் நிகழ்வே.

என் பதிவுகளுக்காக நேரமொதுக்கி என்னை வாழ்த்தியும், வாசித்து, மனதில் தோன்றிய கருத்துகளையுச் சொன்ன குமரன், அப்படிப்போடு, ஜோ, என்னார், ஞானவெட்டியான், டி.பி.ஆர் ஜோசப், கோ.ராகவன், பிரதீப், வசந்தன், சிவா, சிங்.செயகுமார், அழகப்பன், ராமச்சந்திரன் உஷா, ஆசிப் மீரான், நிலா, துளசிகோபால், நண்பன், முத்து(தமிழினி), மூர்த்தி, பொட்டி கடை, நிலவு நண்பன், சதிஸ், பரஞ்சோதி, கமலியோன், நியோ, தருமி, கீதா, சந்திப்பு, ரவிசங்கர் இளவஞ்சி, சுந்தர், இலவச கொத்தனார், பூங்குழலி, மோகன்தாஸ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். பின்னூட்டமிடாவிட்டாலும் வாசித்த நண்பர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக.

விடைபெறும் எனக்குபட்ட சில எண்ணங்கள்.

முன்பு இணைய உலகைப் பற்றி ஒரு மிகப்பெரிய பிம்பம் இருந்தது. இன்று அது என்னிடம் இல்லை. இலக்கியம் சார்ந்து இயங்க நினைப்பவர்கள் எவருக்கும் இணையம் எந்த வகைப் பயனையும் தரப்போவதில்லை. அதை இந்த வலைப்பூ
உலகில் தெளிவாக உறுதிப்படுத்திக் கொண்டேன்.

சுயபிம்ப முன்னிறுத்தலுக்காக நண்பர்கள் படும் சிரமங்களை பார்க்கும் போது, மாயைகளின் மீது மயக்கமில்லாதார் யார் என்றும் எண்ணத் தோன்றுகிறது.
ஒரு கலைக்கூத்தாடியின் வாழ்க்கையைப் போன்றுதான் வலைப்பதிவர்கள் நிலை இருக்கிறது. அவன் வாழ்க்கை நிலையைப் போன்றே நிச்சயமில்லாத சூழல்தான் பதிவுகளில் இருக்கிறது.

சிலர் மட்டும், மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே சிறப்பாக இயங்குகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் தங்களை உயர்த்திபிடிக்க, முற்போக்கு சிந்தானாவாதிகளாகவும், சமாதான புறாக்களாகவும், தங்கள் நம்பிக்கைகளுக்கு மாறானவைகளாக இருந்தாலும் சரி, அதனால் தனக்கு பயனும், புகழும் வருகிறதென்றே பொருந்தாத அரிதாரங்களை எல்லாம் பூசிக்கொண்டு கோமாளிகளாக வந்து நிற்பதை காணும் போது நகைப்புக்குரியதாக இருக்கிறது.

ஆனாலும், அவ்வப்போது சிலரின் சுய வடிவங்கள் வீதிக்கு வருவதும் இது போன்ற தன்முனைப்புகளினால்தான் என்பது சற்று மகிழ்ச்சிக்குரிய விசயம்.

பொதுவாக ஓரளவிற்கு தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட மனிதனிடம் காணும் மனநிலை, இருக்கும் இந்த செளகர்யத்தை இழக்க வேண்டாமே என்று சமரசங்களுடன் வாழத் தொடங்கிவிடுவது, மென்மையான அதிர்வுகளற்ற வாழ்க்கைச் சூழலின் மீதான ஒரு மயக்கம். ஒரு இலகுவான புழங்குதற்குரிய இயங்குதளத்திலேயே இயங்குவது. இப்படி இருப்பவர்களை நான் குறை சொல்ல விரும்பவில்லை. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் ஒருவன் முன்னேறுகிறான், முன்னேறி இருக்கிறான் என்பது அவனோடு முடிந்து போக வேண்டிய ஒரு நிகழ்வல்ல. அது ஒரு சங்கிலித் தொடர். தன்னைத் தொடர்ந்தும், தூரமாய் தன்னை பின் தொடர்ந்து வருபவனுக்கும் வழிகாட்டியாகவும் இருக்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு இருக்கிறது. அதைத் தட்டிக் கழிக்கும் போக்கே மிகப்பரவலாக காணபடுகிறது. இந்த மனப்பாங்கு வாழ்க்கையின் மிகக் கீழான நிலையிலிருந்து உயர்ந்தி நிலைக்கு வந்தவர்களிடத்தில் வந்துவிடுவதுதான் பெரும் சோகம். அது அவரைச் சார்ந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு ஒரு பின்னடவை, சறுக்கலை ஏற்படுத்தி விடுகிறது.

அதே போலத்தான் கலை, இலக்கியம் என எதுவானாலும் வாழும் சமூகத்திற்கும், மனிதர்களுக்கும் பயன்படாத எவையும் குப்பைத் தொட்டிக்கு போக வேண்டியதே. மக்கள் பிரச்சனைகளைப் இலக்கியங்களில் பேசுவதால் அதற்குண்டான புனிததன்மைக்கு பங்கம் வருகிறது என்று எவரரவது சொன்னார்கள் என்றால் தேவையில்லை அந்தப் புனிதப் புண்ணாக்குகள் என்று உண்மைகளை நிர்வான நிலையிலே உரத்து சொல்வோம் ஊருக்கு.

வலைப்பூவில் தீவிரமாக இயங்கத் தொடங்கிய குறிகிய காலத்திலேயே எனக்கு வாய்ப்பளித்த தமிழ்மணம் நிர்வாகத்திற்கும், காசி மற்றும் மதி கந்தசாமி அவர்களுக்கும் எனது நன்றிகள்.

எனக்கு மிகவும் பிடித்த இன்குலாப் அய்யா அவர்களின் கவிதையோடு என் நட்சத்திர வாரத்தை நிறைவு செய்கிறேன்.

எழுதமாட்டேன்

எழுதமாட்டேன்
ஒருவரி கூட
நீ
ஒப்பும்படி

எழுத்திலும் அதிரும்
என் பறையொலி
நாராசமாய்
உன்
செவியில் இறங்குதல் போல்

உன்
மெளனவரியும்
அருவருக்க ஊரும்
என்
கண்ணிலூம் மனசிலும்
ஒரு
கம்பளிப் புழுவாய்

என்
கவிதை முளைவிடும்
மனுசங்க வெளியை
உன்
கால்விரல் நகமும்
தீண்டாதது போலவே
மேட்டிமைத் திமிரும்
உன்
சபை வாசலில் கூட
நீளவே நீளாது
என் மயிரின்
நிழலும்

**
அன்புடன்
முத்துகுமரன்.