‘கவிதை’ பகுப்புக்கான தொகுப்பு

அருவருப்பின் குமட்டலோடு

நிராகரிக்கப்பட்ட தன் உலகத்தின்
கவலைகளற்று
சாக்கடைச் சகதியப்பிக் கிடக்கிறான்
சடைக்கிழவன்
அம்பலப்படுத்தல்களற்ற நியதிகளுக்குள்
சீழ்பிடித்த குரூரங்கள் மறைத்த
மனிதத் தோல்கள் கடக்கின்றன
அருவருப்பின் குமட்டலோடு
எவ்வித வினைகளுமின்றி
சுத்தம் குறித்தான நாகரீகம் விளம்பி

கூடு திரும்பல்

மெளனங்களான காயம் படர

மகிழ்வான நொடிகளைச் சுமந்து
மீண்டுமொரு கட்டாய
கூடுதிரும்பல்
மேலும்பிய விமானத்தின் இரைச்சலில்
சுவடற்றாதான வலிகள்
மேகத்திரள்களுக்குள் கரைகிறது
கண்ணாடி சாளரத்தின் வழியே
எதுவும் நடக்காதது போலவே
தரையிரங்கிப் போகிறது
நாடு திரும்பா வாழ்வு

பேசாதே இறையாண்மை

முதல் மூச்சை விடாது வெடித்துச் சிதறிய குழந்தைகள்
மறக்கமுடியாத தாய்களின் மரண நிர்வாணங்கள்
உறுப்பறுந்த உறவுகள்
சிதைக்கப்பட்ட தொப்புள் கொடி
மொட்டைப் பனையாய் என்னை
வேரறுத்துவிட்டு
பேசாதே இறையாண்மை

வாழிய பல்லாண்டு

,

கொடி

மூவர்ணக் கொடி
அறுக்கிறது
தமிழன் தொப்புள்கொடி
உதிர்த்துப் போன பூக்களில்
தேசத் தாயின் திலகத்தில்
வெடித்துச் சிதறிய எம் தாய்களின் சூல்கள்
கருவறைச் சதைகளோடு

கதறல்களுக்கு காதுகளையும்
பிணக்குருதி வாடை சுவாசிக்கவும்
ஆணையிடுகிறது சுதந்திரக் கொடி
அனுமதித்த அளவோடு அழ

மறத்துப் போகாத உணர்வெஞ்சியிருப்பின்
மரித்துப் போகலாம்
இல்லையேல்
மண்டியிடாது கொடி கிழித்துப் போகலாம்
நாளை நம் கொடி

அறுபடாதிருக்க

யுத்தவாடை – நெல்லை ஜெயந்தா


பதுங்கு குழிக்குள்

துள்ளி விழுந்து

காலொடிந்து கதறும்

கன்று குட்டிகள்

விமானத்தைப் பார்த்துப்

பயத்தில்

கதறும்

பறவைகள்

குண்டுச் சத்தத்தில்

தொண்டை

அடைத்துப்போன

குயில்கள்

இறந்த வீடுகளுக்குள்

குஞ்சுகளைத் தேடி

அலையும்

குருவிகள்

ரத்தம் வழியும்

பூக்களில்

யுத்த வாடையை உணரும்

வண்ணத்துப் பூச்சிகள்

இவைகளையேனும்

காப்பாற்றுங்கள்

இவற்றில்

யாரும்

தமிழர்கள்

இல்லை

இறையாண்மை

குண்டுகள் இடு!
கொலைகள் செய்!
வன்புணர்!
யோனிகள் சிதை!
வாழ்விடங்கள் தகர்!
சவக்குழிகள் பயிரிடு!
மனிதநேயம் நிர்வாணமாக்கு!
பட்டியலிடு, இறந்த குழந்தைகளையும் தீவிரவாதிகளாக்கி!
எல்லாம் செய்!
அரசாக!
அரசாக!
எம்
தமிழன் விழிக்காதவரை

உன் இறைமைக்கு
உத்திரவாதம் கொடுக்கவும்,
கட்டிக் காக்கவும்,
கூடவும் ஆசிகளோடும்
சிரித்துக் கொண்டிருப்பர்,
காந்தி தேசத்து அகிம்சை ராமர்கள்!

பயணம்

விரவிக் கிடக்கும் ஒலித்திரளினூடாக பயணித்தாலும்
மெளனத்தோடு
இதயக்குழியில் உள்ளடங்கி
உதிர்த்திடாத வார்த்தைகளுக்குள்
உயிர் கொண்டிருக்கிறது
எனது கவிதைகள்
யாரும் மொழிபெயர்த்திட இயலாதவாறு

முடிவுறாத் தனிமை

அருகாமையற்றதின் வலியின் கீறலில்
தொலைவின் நீளத்தை தீடிரென உணர்ந்து கொள்கிறது
இறுக்கம் கொண்ட மனது
பிறர் பார்வை மறைக்க
சலனமற்ற முகமூடியணிந்து மறைந்து கொள்கிறது வெறுமை
சொற்ப கணங்களே நீடித்தாலும்
எதன் காரணம் என்றறிய இயலாது
தாளவியலா அழுத்தத்தை தந்துவிட்டுப் போகிறது
முடிவுறாத் தனிமை

அடுத்த பக்கம் »