‘இளையராஜா’ பகுப்புக்கான தொகுப்பு
இசை, இளையராஜா, பெரியார்.
சமீபத்தில் வலைப்பூவில் வெகுவாக பேசப்பட்ட விடயம் பெரியார் திரைப்படத்திற்கு இசையமைக்க இளையராஜா மறுத்தது. அரசியல் அநாதையாகிப் போன பா.ஜ.க இளையராஜவின் இந்த முடிவை ஆதயமாக்கி அரசியல் செய்ய முனைகிறது.
முதலில் ஒரு பணியை தேர்ந்தெடுப்பதற்கான முழு உரிமையும் இளையராஜாவிற்கு உண்டு. அதை யாரும் விவாதத்திற்கு உட்படுத்த இயலாது. அந்த வகையில் இந்த மறுப்பு எதார்த்தமானது. நிர்பந்தத்தின் காரணமாகவோ, மனவிருப்பமின்றியோ வெளிவரும் எந்த படைப்பும் உயிர்ப்புடன் இருந்திடாது. ஒரு கலைஞனாக அவர் எடுத்திற்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கதே.
ஆனால் அவர் மறுத்ததற்கு காரணம் பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர் என்றால் இசையில் ஞானியாக இருந்தாலும் வாழ்வியலில் அவர் பூஜ்ஜியம் என்றே காட்டுகிறது.
பெரியாரை பின்பற்றுபவரும் சரி, அவரை எதிர்ப்பவரும் சரி அவரை ஒரு கடவுள் மறுப்பாளராகவே அடையாளப்படுத்துகின்றனர். பெரியாரின் கடவுள் மறுப்பு என்பது விரிந்த தளம் கொண்டது. அவரின் கடவுள் எதிர்ப்பு என்பது
வேத அதிகார எதிர்ப்பே. இந்த மக்களை சாதியின் பெயரால் வர்ண அடுக்குகளில் வைத்து அடிமைப்படுத்திய வேதத்தை, வேத அதிகாரத்தை எதிர்ப்பதற்கு எடுத்த கருவியே.
தனிப்பட்ட இறை நம்பிக்கையை அவர் முழுமையாக ஆதரித்திருக்கிறார். மதித்திருக்கிறார். ஆனால் இறை நம்பிக்கை என்னும் பெயரில் மனித குலத்தை அடிமைத்தனம் செய்வதை மிக மூர்க்கமாக, தயவு தாட்சண்யமின்றி எதிர்த்திருக்கிறார். அவர் அமைத்து கொடுத்த பாதைதான் நாம் இன்று ஓரளவேனும் வாழ்க்கையில் சுயமரியாதையோடு பயணிக்க வழி செய்திருக்கிறது. பெரியாரை வாசிக்க, புரிந்து கொள்ள, அடிப்படையில் மனதளவிலேனும் சமத்துவத்தை கொண்டிருப்பவராக வேண்டும். அத்தைகைய எண்ணம் இல்லாத எவராலும் அவரை உள்வாங்கி கொள்ள இயலாது.
இளையராஜா ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.
இளையராஜவிற்கு, அவன் சுயமரியாதைக்கு அநீதி, அவமானம் என்று வரும் போது துணை நிற்பவர்கள் பெரியாரிய வாதிகளாகத்தான் இருப்பார்களே அன்றி இன்று ஆதரவளித்து அரசியல் செய்யும் கோமகன்கள் அல்ல
மறுமொழிகள் (178)